தெருக்களில் ஆதரவின்றித் தவிக்கும் விலங்குகளை மீட்டு, அவற்றுக்குப் பாதுகாப்பான வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்த இளம் பெண் ஒருவர், நாய்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் கனடாவில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மணிட்டோபா மாகாணத்தைச் சேர்ந்த 37 வயதான அமண்டா நோபிஸ், விலங்குகள் மீது மிகுந்த அன்பு கொண்ட ஆர்வலராகவும், ‘K9 Advocacy Manitoba’ என்ற விலங்குகள் நல அமைப்பின் தன்னார்வலராகவும் பணியாற்றி வந்தார்.
மணிட்டோபாவின் சாண்டி பே ஓஜிப்வே பழங்குடியின சமூகத்தில் இருந்த தாய் நாயொன்றையும், அதன் புதிதாகப் பிறந்த குட்டிகளையும் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வதற்காக அமண்டா தனியாக அப்பகுதிக்குச் சென்றிருந்தார்.
அவர் சென்ற வீட்டில் உரிமையாளர் இல்லாத நேரத்தில், அங்கிருந்த இரண்டு ஆண் நாய்கள் திடீரென ஆக்ரோஷமாக மாறி அமண்டாவைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாய்களின் கொடூரமான தாக்குதலில் படுகாயமடைந்த அமண்டா உயிரிழந்தார். மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவரது உடல் முழுவதும் நாய்கள் கடித்ததால் ஏற்பட்ட பலத்த காயங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பல ஆண்டுகளாக இந்தச் சமூகங்களுக்குத் தனியாகச் சென்று விலங்குகளை மீட்டு வருகிறோம். அமண்டாவும் எந்தத் தயக்கமும் இல்லாமல் விலங்குகளுக்கு உதவுவதற்காகச் சென்றார். ஆனால், நடக்கக்கூடாத மிக மோசமான சம்பவம் நிகழ்ந்துவிட்டது” என அமைப்பின் இயக்குநர் செலீசா கோர்க் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு நாய்களும் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பின்னர் கருணைக் கொலை செய்யப்பட்டன. அமண்டா மீட்பதற்காகச் சென்ற தாய் நாயும் அதன் குட்டிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமண்டாவின் உயிரிழப்பு தனிப்பட்ட ஒரு துயரச் சம்பவம் மட்டுமல்லாமல், மணிட்டோபாவின் தொலைதூர பழங்குடியினப் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வரும் கட்டுப்பாடற்ற நாய்கள் மற்றும் விலங்கு பராமரிப்பு வசதிகளின் பற்றாக்குறை தொடர்பான பிரச்சினையையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
மணிட்டோபாவில் உள்ள 63 பழங்குடியினச் சமூகங்களில் மாதந்தோறும் சராசரியாக 1,000 நாய் கடி சம்பவங்கள் இடம்பெறுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படாத சம்பவங்களையும் சேர்த்தால், உண்மையான எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கலாம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
விலங்குகளைக் காப்பாற்றுவதற்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அமண்டாவின் மரணம், விலங்கு மீட்புப் பணிகளில் ஈடுபடுபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், தொலைதூர சமூகங்களில் விலங்குகளுக்கான மருத்துவம், கருத்தடை மற்றும் பராமரிப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.