அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான நாணய மாற்று விகிதம் “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்ப், பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க டாலருடன் கனடா டொலரின் சமநிலையற்ற நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது. பல ஆண்டுகளாக இந்நிலை நீடித்து வருகிறது, ஆனால் இனி அது தொடராது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து அவர் விரிவாக விளக்கவில்லை.
தற்போது 1 அமெரிக்க டொலர் என்பது சுமார் 1.38 கனடா டொலருக்குச் சமமாக உள்ளது (அதாவது 1 கனடா டொலரின் மதிப்பு சுமார் 72 அமெரிக்க சென்ட்கள்).
வரலாற்று ரீதியாகக் கனடா டொலர் குறைந்த மதிப்பில் இருப்பது, அமெரிக்க வாடிக்கையாளர்களுக்குக் கனடாவின் ஏற்றுமதிப் பொருட்களை மலிவாகவும், கனடா மக்களுக்கு அமெரிக்கப் பொருட்களைக் கூடுதல் விலையுடனும் மாற்றுகிறது.
ஆகஸ்ட் 22 முதல் கனடா ஏற்றுமதிகள் மீது டிரம்ப் விதித்த 50% வரிக்கான பதிலடியாக, அமெரிக்காவின் 700 பொருட்கள் மீது புதிய வரிகளைச் சுமத்த கனடா முடிவு செய்துள்ளது.
செப்டம்பர் 8-ஆம் திகதி இந்த வரிகள் அமலுக்கு வரவுள்ள நிலையில் டிரம்பின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 21 அன்று இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததிலிருந்து, கனடாவை “மிக மோசமாகச் சுரண்டும் நாடுகளில் ஒன்று” என டிரம்ப் கடுமையாகச் சாடி வருகிறார்.
“பல தசாப்தங்களாக அவர்கள் நம்மைச் சுரண்டி வருகிறார்கள், அது இனி நிறுத்தப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
டிரம்பின் இந்த விமர்சனங்களுக்குக் கனடா பிரதமர் மார்க் கார்னி இதுவரை பகிரங்கமாகப் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.
அதேவேளையில், அமெரிக்காவின் வரிகளுக்கு எதிராகக் கனடா அரசு எடுத்து வரும் பதில்-வரி நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு மக்களிடையே கணிசமான ஆதரவு இருப்பதாகச் அண்மைய ‘நானோஸ்’ கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.