உலக நாடுகளின் அமைதியைக் காக்கும் சர்வதேசப் பணிகளில் ஈடுபட்டுச் சேவையாற்றிய கனடிய அமைதிப்படை வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், ஒட்டாவாவில் உள்ள ‘நல்லிணக்க அமைதிப்படை நினைவுச் சின்னத்தில்’ சிறப்பு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
தேசிய அமைதிப்படை வீரர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்கள், தற்போதைய இராணுவ வீரர்கள், கனடிய அரச பொலிஸார், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் பணியில் ஈடுபட்டிருந்த 9 கனடியப் படை வீரர்கள் பயணித்த ‘பஃப்பலோ’ விமானம் சிரியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அனைவரும் உயிரிழந்தனர்.
கனடிய அமைதிப்படை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிக மோசமான உயிரிழப்பு இதுவாகும்.
இந்தத் தியாகத்தை நினைவு கூரும் வகையில், கனடாவில் 2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி ‘தேசிய அமைதிப்படை வீரர்கள் தினமாக’ அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
1948 ஆம் ஆண்டு முதல், 1,25,000-க்கும் மேற்பட்ட கனடிய ஆயுதப்படை வீரர்களும் 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளும் உலகின் 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சர்வதேச அமைதிப் பணிகளின் போது இதுவரை மொத்தம் 130 கனடியப் படை வீரர்கள் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.
மேலும், அடுத்த தலைமுறை இளைஞர்களும் நாட்டின் அமைதிப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது நம்பிக்கையளிப்பதாக நிகழ்வில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.