கடந்த 2021ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் குடியரசுக் கட்சியின் இணையதளத் தரவுகளைத் திருடி, கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒன்டாரியோவைச் சேர்ந்த நபர், கனடா நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இது குறித்து இன்று மதியம் அவரது வழக்கறிஞர்களான அரேஷ் கியாசி மற்றும் ரியாஸ் சயானி வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குடியரசுக் கட்சியின் இணையதளத்தை ஹேக் செய்ததில் தங்களுக்குரிய பங்கை ஆப்ரி காட்டில் முறைப்படி ஏற்றுக்கொண்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
ஒன்டாரியோவின் நியூமார்க்கெட் நீதிமன்றத்தில், கணினியை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியது, கணினித் தரவுகளுக்குச் சேதம் விளைவித்தது மற்றும் பிணை உத்தரவை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகளை ஆப்ரி காட்டில் ஒப்புக்கொண்டுள்ளதாக வழக்கறிஞர் கியாசி மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
கனடாவின் ஒஷாவா (Oshawa) பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்திருந்தனர். அவர் மீது கனேடிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
டெக்சாஸ் குடியரசுக் கட்சியின் சர்வரை (server) சட்டவிரோதமாக ஊடுருவி, அதன் தரவுகளைச் சிதைத்து, பேக்அப் (backup) தரவுகளை ஆப்ரி காட்டில் பதிவிறக்கம் செய்ததாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியிருந்தது.
இதில் தனிநபர்களின் விபரங்கள் அடங்கிய முக்கியமான தரவுகளும் இருந்தன. பின்னர், அந்தத் தரவுகள் இணையத்தில் பிறர் பதிவிறக்கம் செய்யும் வகையில் கசியவிடப்பட்டன.
மேலும், இந்தச் சைபர் தாக்குதலுக்குத் தானே பொறுப்பு என்று சமூக ஊடகங்களில் உரிமை கோரியதாகவும், அவரது மின்னணு சாதனங்களைச் சோதித்தபோது திருடப்பட்ட தரவுகள் அவரிடம் இருந்தது கண்டறியப்பட்டதாகவும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்தது.




