கனடாவின் நீதிமன்றங்களில் குடிவரவு தொடர்பான வழக்குகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதால், நீதிமன்றத்தின் பணிச்சுமை மிகவும் கடுமையான நிலையை எட்டியுள்ளதாக தலைமை நீதிபதி ஆலன் டினர் தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு சுமார் 5,000 முதல் 6,000 குடிவரவு வழக்குகள் மட்டுமே பதிவாகிய நிலையில், 2021 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 9,700 ஆக உயர்ந்தது. நடப்பாண்டில் குடிவரவு தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை 33,000-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 14,000-க்கும் அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தற்போது சுமார் 28,000 வழக்குகள் விசாரணைக்காக நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை 44 ஆகவே தொடர்ந்து இருக்கும் நிலையில், 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வழக்குகளின் எண்ணிக்கை சுமார் 600 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக நீதிபதிகளும் நீதிமன்ற ஊழியர்களும் இரவு நேரங்களிலும், வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
C-12 எல்லை பாதுகாப்புச் சட்டத்தால் மேலும் வழக்குகள்
மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட கனடாவின் C-12 எல்லை பாதுகாப்புச் சட்டமும் நீதிமன்றத்தின் பணிச்சுமையை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவிற்கு வந்து ஒரு வருடத்திற்குப் பின்னர் அகதி அந்தஸ்து கோருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து 2,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், நாடுகடத்தல் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தக் கோரி வழக்கமாக ஆண்டுக்கு 300 முதல் 400 விண்ணப்பங்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அவற்றின் எண்ணிக்கை 1,100-ஐ தாண்டியுள்ளது.
ஆவண செயலாக்கத்திலும் கடும் தாமதம்
நீதிமன்ற ஆவணங்களை செயலாக்குவதற்கான வழக்கமான இலக்கு 48 மணிநேரமாக இருந்த நிலையில், தற்போது சில விண்ணப்பங்களை செயலாக்குவதற்கு எட்டு வாரங்கள் வரை தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையை சமாளிக்க கூடுதல் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்த செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பிற டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் நீதிமன்ற நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.




