Reading Time: < 1 minute

Toronto நகர நிர்வாகம், பிபா உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக வாங்கிய ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகளை லாபத்திற்கு மறுவிற்பனை செய்திருப்பது குறித்து மேயர் ஒலிவியா சௌ விளக்கம் அளித்துள்ளார்.

Tamil Business Directory

போட்டிகளை நடத்துவதற்கான செலவுகளை ஈடுகட்டவும், வரி செலுத்தும் மக்களின் பணச் சுமையை குறைக்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Toronto நகரம், தமக்குக் கிடைத்த சிறப்பு வாய்ப்பைப் பயன்படுத்தி 3,500க்கும் மேற்பட்ட பிபா உலகக் கிண்ண டிக்கெட்டுகளை வாங்கியுள்ளது. பின்னர், அந்த டிக்கெட்டுகள் பெருநிறுவனங்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய், நகரத்திற்கு ஏற்படும் செலவுகளை சமாளிக்க உதவும் என மேயர் ஒலிவியா சௌ கூறியுள்ளார். இதன் மூலம் பொதுமக்கள் மீது கூடுதல் நிதிச்சுமை ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த முடிவு எதிர்க்கட்சிகளிடமும், கால்பந்து ரசிகர்களிடமும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சில நகர மேயர்கள், தங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி உள்ளூர் குடும்பங்களுக்கு குறைந்த விலையில் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொடுத்துள்ளனர். ஆனால் Toronto நகர மேயர், டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்று லாபம் பெற முயல்கிறார் என கவுன்சிலர் பிராட் பிராட்போர்ட் குற்றம் சாட்டியுள்ளார்.

பிபா உலகக் கிண்ணத்தை நடத்தும் நகரங்களில் ஒன்றாக Toronto தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், போட்டி ஏற்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செலவுகள் குறித்து தொடர்ந்து விவாதங்கள் எழுந்துவருகின்றன.