கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள லவால் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரு பதின்ம வயதினர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிகாலை 1:20 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், பதிவு இலக்கத் தகடு இல்லாத வாகனம் ஒன்றைக் கண்டு அதை நிறுத்துமாறு சமிக்ஞை கொடுத்துள்ளனர்.
பொலிஸார் வாகனத்தை நிறுத்த முயன்றதும், அது வேகத்தை அதிகரித்துத் தப்பிச் சென்றது. எனினும் பொலிஸார் வாகனத்தைத் துரத்திச் செல்லவில்லை” என லவால் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் லோரண்ட் ஆர்செனோ தெரிவித்துள்ளார்.
தப்பிச் சென்ற கார், சில நிமிடங்களில் லோரண்டைட்ஸ் புலேவார்ட்டில் அமைந்துள்ள ‘அட்லாண்டிஸ் ஜிம்’ கட்டடத்தின் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
வாகனத்தைச் செலுத்திய ஆண் ஓட்டுநரும், அதில் பயணித்த 19 வயது இளம் பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், வாகனத்திலிருந்த மற்றொரு 19 வயது இளைஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
வாகனத்தில் உரிமத் தகடு இல்லை என்பதும், காரின் அதிகப்படியான வேகமே விபத்துக்கு முக்கியக் காரணம் என்பதும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தைத் தொடர்ந்து, செயிண்ட்-மார்ட்டின் புலேவார்ட் மற்றும் ரிச்சர்ட் தெரு ஆகியவற்றிற்கு இடைப்பட்ட லோரண்டைட்ஸ் புலேவார்ட் பகுதி முழுமையாக மூடப்பட்டு, பொலிஸார் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தித் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.