கனடாவின் வடக்கு ஒன்டாரியோவில் உள்ள ஹியூரான் ஷோர்ஸ் பகுதியில் திட்டமிட்டுத் தொடர்ச்சியாகக் காட்டுத் தீ மூட்டிய குற்றச்சாட்டில் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 28 ஆம் திகதி மாலை 5:30 மணியளவில், ‘மெல்வெல் வீதிக்கு’ அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் காட்டுத் தீ பரவுவதாக உள்ளூர் தீயணைப்புத் துறைக்குக் கோரிக்கைகள் வந்தன.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும், வீதியின் இருபுறமும் சுமார் 10 அடி முதல் 700 அடி வரையிலான காட்டுப்பகுதிகளில் திட்டமிட்டு வைக்கப்பட்ட 10 சிறிய காட்டுத் தீ சம்பவங்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்தினர்.
தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் நடமாடிய சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரைத் தீயணைப்பு வீரர்கள் கவனித்துள்ளனர்.
அதனடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய பொலிஸார், இரவு 7:15 மணியளவில் அருகில் உள்ள பாதை ஒன்றில் வைத்து கியூபெக், சட்டன் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மீது சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் வகையில் தீ வைத்தல் மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் ஜூலை 28 ஆம் திகதி ‘பிளைண்ட் ரிவர்’ நீதிமன்றத்தில் பிணை விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.