Reading Time: < 1 minute

பொத்துவில் முதல் பொலிகண்டி (P2P) அணிவகுப்புக்கு ஆதரவாக கனடாவின் டொரொண்டோ மற்றும் மொன்ரியலில் இடம்பெற்ற வாகன ஆர்ப்பாட்ட பேரணிகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பங்கேற்றன.

எஜக்ஸ், மார்க்கம்/ஸ்கார்பாரோ, பிராம்ப்டன், மற்றும் மிசிசாகா ஆகிய நகரங்களில் இருந்து ஒவ்வொரு நகரத்திலிருந்தும் வாகனங்கள், மதியம் 12 மணிக்கு எதிர்ப்பு பேரணிகளைத் தொடங்கி, பிற்பகல் 3.30 மணிக்கு குயின்ஸ் பூங்காவில் இணைந்தன.

24 மணி நேர குறுகிய அறிவிப்புடன், டொராண்டோ பகுதி மற்றும் மொன்ரியல் பகுதியில் நடந்த இந்த வாகன பேரணிகளில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பங்கேற்றன.

கனடாவில் இடம்பெற்ற வாகன ஆர்ப்பாட்ட பேரணிகள் மற்றும் ஈழத்தில் இடம்பெற்ற நீண்ட எதிர்ப்பு அணிவகுப்பு ஆகியவை, போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பு ஆகியவற்றுக்கான பொறுப்பு மற்றும் நீதியை அனத்துலகத்திடம் நாடி நிற்கின்றன.

இந்த வாகன பேரணிகள் மற்றும் நீண்ட எதிர்ப்பு அணிவகுப்புகள் இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை அனைத்துலகத்தின் கவனத்திற்கு கொண்டு வருகின்றது.

தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தில் இடம்பெற்ற 700 இற்கும் மேற்பட்ட கி.மீ நீளமுள்ள போராட்ட அணிவகுப்பு, சர்வதேச சமூகத்தை தமிழ் தேசத்தை அங்கீகரிக்கவும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான நிரந்தர அரசியல் தீர்வைப் பெறவும் வலியுறுத்தி நிற்கின்றது.

இந்த நிரந்தர அரசியல் தீர்வு, மனித உரிமைகள் மீண்டும் மீண்டும் மீறப்படுதலை தடுக்கவும் மற்றும் அதனத்தொடர்ந்து இடம்பெறக்கூடிய போரையும் தடுக்க கூடியது.

கனடியத் தமிழ் ஊடகங்கள் மற்றும் கனேடிய பிரதான ஊடகங்கள் ஆகியவை இந்த பேரணியின் விபரங்களை மக்களுக்கு எடுத்துச் சென்றது.