Reading Time: < 1 minute

பல்வேறு மேற்கத்திய நாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறார்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

சமீபத்தில் பிரித்தானியாவில் நிகழ்ந்த புலம்பெயர்தல் எதிர்ப்பு வன்முறையில் பங்கேற்றவர்களில் பலர் சிறுவர்கள் என்பது நினைவிருக்கலாம்.

கனடாவில், 2022ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், பூங்கா ஒன்றில் படுத்திருந்த, வீடற்றவரான கென்னத் லீ (59) என்னும் நபரை சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்கினார்கள் ஒரு கூட்டம் பதின்மவயதுப் பெண்கள்.

படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லீ, டிசம்பர் மாதம் 18ஆம் திகதி உயிரிழந்துவிட்டார்.

அதைத் தொடர்ந்து, லீயைத் தாக்கிய, 13 முதல் 16 வயதுடைய எட்டு பெண்கள் கைது செய்யப்பட்டார்கள்.

ஆக, சிறுவர்கள், சிறுமிகள் குற்றச்செயல்களிள் ஈடுபடுவது அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், நேற்று காலை வான்கூவர் தீவிலுள்ள Courtenay நகரில் யாரோ தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் அங்கு விரைந்துள்ளார்கள்.

அப்போது, அங்குள்ள நூலகம் ஒன்றின் அருகே, 16 வயது சிறுமி ஒருத்தி அவ்வழியே செல்பவர்களை கத்தியால் தாக்கியது தெரியவந்துள்ளது. அவள் தாக்கியதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து அந்த 16 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளாள்.

எதற்காக அவள் தாக்குதல் நடத்தினாள் என்பது தெரியவில்லை. விரைவில் அந்தச் சிறுமி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறாள்.