Reading Time: < 1 minute

கனடாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான “ஏர் கனடா” அதன் 1,500 பணியாளர்களை விரைவில் பணி இடைநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

கனடாவில் புதிய பயணக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பல விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை அடுத்து “ஏர் கனடா” இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை கனடா விதித்துள்ளது. அத்துடன், மெக்ஸிகோ மற்றும் அனைத்து கரீபியன் பகுதிகளுக்கான விமான சேவைகளையும் ஏப்ரல் 30 வரை கனடா நிறுத்தியுள்ளது.

இதன் காரணமாக விமான சேவை நிறுவனங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இதனையடுத்தே 1,500 பணியாளர்களை பணி இடைநீக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக “ஏர் கனடா” தெரிவித்துள்ளது.

இதேவேளை, அடுத்த வாரம் தொடங்கி பின்வரும் மேலும் 17 வழித்தடங்களுக்கான விமான சேவையை “ஏர் கனடா” நிறுத்தவுள்ளது.

ரொராண்டோ – ஃபோர்ட் மியர்ஸ்
ரொராண்டோ – பாஸ்டன்
ரொராண்டோ – வொஷிங்டன், டி.சி.
ரொராண்டோ – டென்வர்
ரொராண்டோ – நியூயார்க் நகரம் (லாகார்டியா)
மொன்றியல் – பாஸ்டன்.
மொன்றியல் – லாகார்டியா.
வான்கூவர் – சியாட்டில்
ரொராண்டோ- பொகோட்டா, கொலம்பியா.
ரொராண்டோ – டுபாய்.
ரொராண்டோ – சாவோ பாலோ, பிரேசில்.
ரொராண்டோ – ஹொங்கொங்
ரொராண்டோ – டெல் அவிவ், இஸ்ரேல்.
மொன்றியல் – கொலம்பியா – பொகோட்டா
வான்கூவர் – லண்டன்
வான்கூவர் – டோக்கியோ (நரிடா).
ரொராண்டோ – அயர்லாந்து, டப்ளின்

இதேவேளை, கனடாவில் ஏனைய விமான சேவை நிறுவனங்களும் சேவைகளை இடைநிறுத்தியுள்ளதுடன், பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க பணியாளர்களை இடைநீக்கம் செய்யத் தீா்மானித்துள்ளன.