கனடாவிலிருந்து அண்மையில் இலங்கை திரும்பிய ஈழத் தமிழர் ஒருவர், முல்லைத்தீவு நாயாறு கடற்பகுதியில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 51 வயதான சதீசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே கனடாவிலிருந்து இலங்கைக்கு திரும்பியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) தனது ஐந்து நண்பர்களுடன் முல்லைத்தீவு பகுதிக்குச் சுற்றுலா சென்றுள்ளார். நண்பகல் வேளையில் நாயாறு கடற்பகுதியில் நண்பர்களுடன் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கியுள்ளார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்த போதிலும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த துயரச் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாவிலிருந்து சொந்த நாட்டிற்கு திரும்பிய சில நாட்களிலேயே இடம்பெற்ற இந்த எதிர்பாராத உயிரிழப்பு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.