கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வீசி வரும் பலத்த காற்று மற்றும் வறண்ட காலநிலை காரணமாக, காட்டுத்தீ மேலும் தீவிரமடைந்து மக்கள் வாழும் பகுதிகளை அச்சுறுத்தி வருகிறது.
மாகாணத்தைக் கடந்து செல்லும் குளிர்காற்று முகப்பு காரணமாக, மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் தெற்குப் பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, நிலப்பரப்புகள் மிக எளிதில் தீப்பற்றக்கூடிய நிலையில் உள்ளன.
தென்மேற்கு திசையிலிருந்து வீசும் காற்று, பின்னர் வடமேற்கு திசையை நோக்கி மாறக்கூடும் என்பதால், தீயணைப்பு வீரர்களுக்கு அடுத்தடுத்த நாட்கள் மிகவும் சவாலானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிண்டன் பகுதிக்கு அருகே எரிந்து வரும் ‘பேர் லேக்’ காட்டுத்தீ, இதுவரை சுமார் 732 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்குப் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது மாகாணத்தில் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய 4 முக்கியக் காட்டுத்தீப் பகுதிகளில் ஒன்றாகும். கிளிண்டனுக்கு வடகிழக்கே உள்ள கிரீன் லேக் பகுதி வாசஸ்கள், எந்த நேரத்திலும் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கிளிண்டன் கிராமப் பகுதியில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் ஆங்காங்கே எரியும் தீயைக் கட்டுப்படுத்தப் போராடி வருவதால், மக்கள் எப்போது மீண்டும் தங்களது வீடுகளுக்குத் திரும்புவார்கள் என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை.
கடுமையான காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாகப் புதிய காட்டுத்தீச் சம்பவங்கள் உருவாகும் அபாயம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.