கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் டர்ஹாம் பிராந்தியத்தில் பணியாற்றிய முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர், 20 ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது சிறுமி தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அண்மையில் வழங்கிய புதிய தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக ஒன்டாரியோவின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் பொலிஸ் அதிகாரியான கெவின் சீமன்ஸ் (Kevin Seamons) என்பவருக்கு எதிராக, 2003 ஆம் ஆண்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல குற்றவியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக சிறப்பு புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் ஜோசப் மர்டினோ தெரிவித்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு காவல்துறை சேவைகளுக்கான ஒன்டாரியோ சிவிலியன் கமிஷன் ஆவணங்களின்படி, பாதிக்கப்பட்டவர் அப்போது 17 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் 2003 ஆம் ஆண்டில் முதன்முதலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, கான்ஸ்டபிள் சீமன்ஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், அவரது லாக்கரும் சோதனை செய்யப்பட்டது.
அந்த சோதனையின்போது அவரது லாக்கரில் இருந்து ஒன்பது ஆபாசப் புகைப்படங்களும் மூன்று பொலிஸ் தடிகளும் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவர் 2006 ஆம் ஆண்டில் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த வழக்கு பின்னர் முடித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் 2024 ஆம் ஆண்டில் புதிய தகவல்களுடன் மீண்டும் முன்வந்ததை அடுத்து, விசாரணை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் பின்னர், கெவின் சீமன்ஸுக்கு எதிராக கனடா தழுவிய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில், ஆல்பர்ட்டாவின் மோரின்வில் பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராக மொத்தம் 22 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட முன்னாள் அதிகாரி தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவொரு தொடர்பும் கொள்ளக்கூடாது என்ற கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.




