Reading Time: < 1 minute

பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கானுடன் இணைந்து பாடல் காணொளியொன்றில் தோன்றிய பாடகரின் கனடிய வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவில் வசித்து வரும் பஞ்சாப் பாடகரின் வீட்டின் மீது இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பிரிட்டிஷ் கொலம்பிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

திங்கட்கிழமை அதிகாலை வேளையில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியா பகுதியில் அமைந்துள்ள ஏ.பீ டில்லோன் என்ற இந்திய- கனடிய பஞ்சாப் பாடகரின் வீட்டின் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் சுமார் 14 துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பாடகருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தமக்கோ தமது குடும்பத்தினருக்கோ எவ்வித பாதிப்பும் கிடையாது என பாடகர் டில்லோன் சமூக ஊடகங்களின் ஊடாக தெரிவித்துள்ளார்.

தம்மீது கரிசனை கொண்டு தமக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் கனடிய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

திட்டமிட்ட அடிப்படையில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு இந்தியாவை மையமாகக் கொண்ட லோரன்ஸ் பிசியோனி என்ற கும்பல் உரிமை கோரி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் இணைந்து பாடல் ஒன்றை பாடியதன் எதிரொலியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.