Reading Time: < 1 minute

கனடாவில் கல்வி கற்க வாய்ப்புக் கிடைத்தால், கல்வி கற்றபின் எப்படியாவது கனடாவில் குடியுரிமை பெறவேண்டும் என்ற நோக்கத்தில்தான் கனடாவுக்கு கல்வி கற்க பல நாட்டவர்கள் வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம்.

சொல்லப்போனால், கனடாவுக்கு கல்வி கற்க வந்தால், எக்ஸ்பிரஸ் நுழைவு மூலமாக நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறலாம் என்றே கனடா அரசு விளம்பரம் செய்துவருகிறது.

ஆனால், கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சர் இப்போது வேறு மாதிரியாக பேசுகிறார். சர்வதேச மாணவர்களுக்கு கனடாவில் கல்வி அனுமதி கிடைத்தால், அது, அவர்களுக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதியோ, அல்லது குடியுரிமையோ கிடைப்பதற்கான அத்தாட்சி அல்ல என்று கூறியுள்ளது கனடா அரசு.

அதாவது, கல்வி விசா, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவதற்கான வழிமுறை அல்ல என எச்சரித்துள்ளது கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு.

கனடா புலம்பெயர்தல் அமைச்சரான மார்க் மில்லர் கூறும்போது, சர்வதேச மாணவர்களுக்கு கல்வி கற்க விசா கொடுக்கப்பட்டால், அது அவர்களுக்கு கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவதற்கான வழிமுறை என்று உறுதியளிப்பதாக பொருள் அல்ல என்று கூறியுள்ளார்.

கல்வி கற்க பிறநாடுகளிலிருந்து கனடாவுக்கு வருபவர்கள், கல்வி கற்றபின் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்வதுடன், தாங்கள் கற்ற திறனை தங்கள் நாட்டுக்காக பயன்படுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார் மார்க் மில்லர்.