கனடாவில் கடந்த ஆறு வாரங்களில் நாட்டின் ரத்த இருப்பு வழக்கத்திற்கு மாறாக 20 சதவீதம் வரை வேகமாகக் குறைந்துள்ளது.
இதற்கான காரணம் தெளிவாகத் தெரியாத நிலையில், ஆகஸ்ட் மாத நீண்ட விடுமுறைக் காலம் நெருங்குவதால், மருத்துவமனைகளில் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்கப் பொதுமக்கள் விரைந்து வந்து ரத்த தானம் செய்யுமாறு ‘கனடியன் இரத்த சேவை அமைப்பு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
கனடாவில் ரத்த இருப்பைச் சீராகப் பராமரிக்க வாரத்திற்கு 18,000 முதல் 19,000 முன்பதிவுகள் தேவைப்படும். ஆனால், கடந்த ஆறு வாரங்களாக வாரத்திற்கு 1,500 முதல் 2,000 வரையிலான முன்பதிவுக் குறைவு ஏற்பட்டுள்ளது.
கோடைகாலத்தில் சுற்றுலா மற்றும் அன்றாட நேர அட்டவணை மாறுவதால் ரத்த தானம் குறைவது வழக்கமானதுதான்.
ஆனால், இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி வழக்கமான அளவை விட மிக அதிகமாக உள்ளது. ரத்த தானம் செய்யத் தகுதியானவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகமாக இருந்தும், தானம் செய்ய முன்வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுவரை மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான சிகிச்சைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை.
நிலைமை தீவிரமடைந்து சிகிச்சைகள் தள்ளிப்போகும் சூழல் வருவதற்கு முன்பே ரத்த இருப்பை உயர்த்துவதே அமைப்பின் முதன்மை இலக்காகும் என அறிவிகக்ப்பட்டுள்ளது.
கனடாவில் ரத்த தானம் செய்யத் தகுதியுடையவர்கள் 50% பேர் இருக்கும் போதிலும், தற்போது 2% மட்டுமே தானம் செய்து வருகின்றனர்.
வேறொருவர் தானம் செய்வார் என்று காத்திருக்காமல், தகுதியுள்ள கனடியர்கள் அனைவரும் முன்வந்து ரத்த தானம் செய்யுமாறு கனடியன் பிளட் சர்வீசஸ் கேட்டுக்கொண்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.