கனடா முழுவதும் விற்பனை செய்யப்படும் பிரபல சாக்லேட் வகையான ‘கேட்பரி டேரி மில்க் ஓரியோ’ சாக்லேட்டுகள் சந்தையிலிருந்து அவசரமாகத் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.
ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கிய பொருள் அட்டையில் குறிப்பிடப்படாமல் விநியோகிக்கப்பட்டதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய உணவு ஆய்வு முகவர் நிறுவனம் இது தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தச் சாக்லேட்டுகளில் ‘பிஸ்தா’ சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அது பற்றிய விபரம் தயாரிப்பின் லேபிளில் குறிப்பிடப்படவில்லை.
பிஸ்தா மற்றும் கொட்டை வகைகளுக்கு ஒவ்வாமை கொண்ட நுகர்வோருக்கு, இந்தச் சாக்லேட்டை உட்கொள்வது தீவிரமான அல்லது உயிருக்கே ஆபத்தான ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வாமை உள்ளவர்கள் இந்தச் சாக்லேட்டை எக்காரணம் கொண்டும் உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வாங்கிய சாக்லேட்டுகளைத் திரும்பக் கொடுத்து பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது குப்பைத்தொட்டியில் எறிந்துவிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாக்லேட்டைச் சாப்பிட்டதால் சிலருக்கு ஒவ்வாமை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகப் புகார்கள் பதிவாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இந்தக் குறிப்பிட்ட சாக்லேட்டுகள் கடைகளில் இருந்து முழுமையாக அகற்றப்படுவதை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், இது தொடர்பான விரிவான உணவுப் பாதுகாப்பு விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளதால், அடுத்தடுத்து பிற தயாரிப்புகளும் திரும்பப் பெறப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.