Reading Time: < 1 minute

கனடாவில் தாவரங்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் பால் பானம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடிய பொதுச்சுகாதார முகவர் நிறுவனம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குறித்த பால்பான வகைகளில் லிஸ்ட்டிரியா எனப்படும் ஒருவகை பாக்டீரியா காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய இந்த பாக்டீரியா வகை ஆபத்தானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இதுவரையில் மொத்தமாக 18 பேர் இந்த லிஸ்ட்டிரியா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டதாகவும் இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒன்றாரியோ மாகாணத்தில் 12 பேரும், கியுபெக் மாகாணத்தில் நான்கு பேரும், அல்பேட்டா மற்றும் நோவா ஸ்கோஷியா ஆகிய மாகாணங்களில் தலா ஒருவரும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

7 வயது முதல் 89 வயது வரையிலானவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் எனவும் அதிக அளவிலானவர்கள் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சில்க் பிராண்ட் ஆல்மண்ட், மில்க் கோகனட் மில்க் ஆல்மண்ட், கோகனட் மில்க், ஓட் மில்க் போன்ற பால் பான வகைகளில் இந்த பாக்டீரியா வகை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ம் திகதி காலாவதியாகும் பால் உற்பத்தி பக்கட்டுகளில் இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பால்பான வகைகள் சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டு பேர் இந்த பால் பானத்தை பருகியதனால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், உயிரிழந்தவர்கள் பற்றிய மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த பால்பான உற்பத்தியை பருகி இரண்டு மாதங்களின் பின்னரே நோய் தாக்கம் ஏற்படும் என்பதனால் இதனை கண்டறிவதில் சிரமங்கள் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.