கனடாவில் உள்ள அனைத்து மாகாணங்களையும் விட கியூபெக் மாகாண மக்கள் அதிக மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்வதாக ‘லெஜர்’ நிறுவனத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான மகிழ்ச்சிக் குறியீடு ஆய்வில் தெரியவந்துள்ளது.
100-க்கு 74.5 புள்ளிகளைப் பெற்று கனடாவின் ‘மிகவும் மகிழ்ச்சியான மாகாணம்’ என்ற பெருமையைக் கியூபெக் தட்டிச் சென்றுள்ளது. எதிர்காலம் குறித்த நம்பிக்கைக் குறியீட்டில் கியூபெக் 72.2 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
நாட்டின் பிற பகுதிகளில் இது 66.6 ஆக மட்டுமே உள்ளது. கியூபெக்கில் வெறும் 22% மக்கள் மட்டுமே தங்களை ‘மகிழ்ச்சியற்றவர்கள்’ எனக் கூறியுள்ளனர்.
நாட்டின் பிற பகுதிகளில் இந்நிலை 33% ஆக உள்ளது. கனடாவின் பெரிய நகரங்களுக்கான தரவரிசையில் கியூபெக் மாகாணத்தில் உள்ள மொன்றியல் நகரம் 72.7 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
கியூபெக்கிற்கு அடுத்தபடியாக நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லேப்ரடார் (71.0) இரண்டாமிடத்தையும், நியூ பிரன்சுவிக் (70.3) மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.
ஒன்டாரியோ மாகாணம் 69.3 புள்ளிகளுடன் நடுத்தர இடத்திலும், பிரின்ஸ் எட்வர்ட் தீவு 67.7 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.
கனடாவின் தேசிய சராசரி மகிழ்ச்சிப் புள்ளிகள் கடந்த ஆண்டின் 68.7-லிருந்து தற்போது 70.5 ஆக உயர்ந்துள்ளது.
பாதுகாப்பான வாழ்வியல் சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நல்ல சமூக உறவுகளே மக்களின் மகிழ்ச்சிக்கு முதன்மைக்காரணங்களாக அமைகின்றன.
எனினும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் நிதி நெருக்கடிகளே கியூபெக் உட்பட ஒட்டுமொத்தக் கனடியர்களின் மகிழ்ச்சிக்கு முதன்மைத் தடையாக உள்ளதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.