Reading Time: < 1 minute

குடியுரிமை பெற்றும், அதாவது, கனேடிய குடிமக்களானபின்பும், கனடாவிலிருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சமீபத்திய ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

திங்கட்கிழமையன்று வெளியான McGill Institute for the Study of Canada என்னும் அமைப்பின் ஆய்வு முடிவுகள், கனடாவிலிருந்து வெளியேறும் கனேடியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக தெரிவிக்கின்றன.

2017ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுகளுக்கிடையில் கனடாவிலிருந்து வெளியேறி வேறொரு நாட்டில் குடியேறும் கனேடியர்களின் எண்ணிக்கை 31 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்களில் ஒரு கூட்டத்தினர் கனடாவை விட்டு அமெரிக்கா, ஹொங்ஹொங் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் குடியேறியுள்ளார்கள்.

கனடாவுடன் ஒன்றிணைந்து வாழும் அளவுக்கு பொருளாதார வசதி, அதாவது வருவாய், இது நம் நாடு என்னும் ஒரு எண்ணத்தைத் தரும் சூழல், இனவெறுப்பின்மை, வாழ வீடு, படித்த படிப்புக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற வேலை என்பதுபோன்ற விடயங்கள் கிடைக்கவில்லை என்பதாலேயே குடியுரிமை பெற்றும் புலம்பெயர்ந்தோர் வேறு நாடுகளுக்கு வெளியேறிவருவதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக, குடியிருக்க சரியான வீடுகள் கிடைக்காததாலேயே, கனடாவுக்கு வந்து நான்கு அல்லது ஏழு ஆண்டுகளுக்குள், குடியுரிமை பெற்றும் புலம்பெயர்ந்தோர் பலர் கனடாவிலிருந்து வெளியேறுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும், அப்படி கனடாவிலிருந்து வெளியேறி வேறு நாடுகளில் வாழ்வோர், (இவர்கள் Canadian expats என அழைக்கப்படுகிறார்கள்), இவர்களுக்கு ஒரு புகார் உள்ளது. அதாவது, தாங்கள் வரி செலுத்தியும், மாகாண தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும், மருத்துவ அமைப்பை பயன்படுத்திக்கொள்ள தாங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கிறார்கள் அவர்கள்.