Reading Time: < 1 minute

கனடாவில் எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய அனைத்து வகையான இடைத்தேர்தல்கள் தொடர்பிலும் விசேட கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய புலனாய்வு படையணி இந்த தேர்தல்களை கண்காணிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் இது தொடர்பில் அறிவித்துள்ளது.

தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் கண்காணிக்கவும் மதிப்பீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பொது தேர்தல்கள் மட்டுமின்றி இவ்வாறான இடைத்தேர்தல்களின் போதும் வெளிநாட்டு தலையீடுகளை குறித்து கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லீபிலென்க் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் மனிடோபா மற்றும் கியூபெக் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தல்களின் போதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இறுதியாக நடைபெற்ற இரண்டு பொது தேர்தல்களின் போது வெளிநாட்டு தலையீடு மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.