Reading Time: < 1 minute

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடாவிற்கு எதிராக 50% புதிய வரிகளை விதிப்பதாகத் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

Tamil Business Directory

அமெரிக்காவின் நெருங்கிய நேச நாடும் முக்கிய பொருளாதாரப் பங்காளியுமான கனடாவுடனான வர்த்தகப் பூசலை இந்த அறிவிப்பு மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

மின் சாதனங்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட சில கனடியப் பொருட்கள் மீது 50% வரிகள் விதிக்கப்படவுள்ளன. டிரம்ப் நிர்வாகம் ஒரு நாட்டின் மீது விதித்துள்ள மிகக் கடுமையான வரிகளில் இதுவும் ஒன்றாகும்.

சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள கனடியப் பொருட்களைப் பாதிக்கும் இந்த வரிகள், அடுத்த 30 நாட்களில் அமலுக்கு வரும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராகக் கனடா பாகுபாடு காட்டுவதாகக் கூறி, 1930 ஆம் ஆண்டின் சுங்கவரிச் சட்டத்தின் பிரிவு 338-ஐப் பயன்படுத்தி டிரம்ப் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். எனினும், வரலாற்றில் இந்த சட்டப்பிரிவு இதற்கு முன்பு இதுவரை இவ்வாறு பயன்படுத்தப்பட்டதில்லை.

எரிசக்தி பொருட்கள், முக்கிய தாதுக்கள், மீன் மற்றும் வாகனங்கள், உலோகம் போன்ற ஏற்கனவே துறைசார் வரிகளுக்கு உட்பட்ட சில முக்கியப் பொருட்கள் இந்த புதிய வரி விதிப்பில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் வட பகுதிக்குள் பரவிய காட்டுத் தீ புகைக்காகக் கனடா மீது வரி விதிக்கப்போவதாக டிரம்ப் அண்மையில் எச்சரித்திருந்த போதிலும், தற்போதைய வரி விதிப்புடன் அதற்குத் தொடர்பில்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கனடா சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்தின் நன்மைகளை நம்புகிறது. எந்தச் சூழ்நிலையிலும் கனடிய தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகங்கள் மற்றும் குடும்பங்களை ஆதரிக்கவும், உள்நாட்டுப் பலத்தை உருவாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கனடா தீவிரமாக எடுக்கும் என கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.