கனடாவின் குடியேற்றம், அகதிகள் மற்றும் குடிமக்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024ம் ஆண்டில் கல்வி விசாவில் கனடாவிற்குள் வந்த சுமார் 50,000 மாணவர்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேராமல் இருப்பது தெரியவந்துள்ளது.
இதில், கிட்டத்தட்ட 20,000 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனும் அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது கல்வி விசாவில் சென்று படிப்பில் சேராதவர்களில் 5.4 சதவீதம் நபர்கள் இந்தியர்கள். மொத்தம் 144 நாடுகளில் இருந்து கல்விக்காக கனடாவிற்கு வந்தவர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இதில், பிலிப்பைன்ஸில் இருந்து வந்தவர்களில் 688 பேர் (2.2%), சீனாவில் இருந்து வந்தவர்களில் 4,279 பேர் (6.9%) படிப்பிற்காக விசா பெற்று கனடாவிற்குள் வந்து தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் சேரவில்லை என்பது தெரியவந்துள்ளது.
கனடா-அமெரிக்க எல்லையில் சட்டவிரோதமாக குடியேறுவதற்கு உதவுவதாகக் குற்றம் சாட்டப்பட்ட கனடா கல்லூரிகள் மற்றும் இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு இடையே கூறப்படும் தொடர்புகள் குறித்து இந்திய சட்ட அமலாக்க முகமைகள் விசாரணையைத் தொடங்கியுள்ளன.
சில இந்திய மாணவர்கள் கனடாவின் கல்வி விசாவை வைத்துக்கொண்டு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.