கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் வரும் பாதையை அடைத்து மோசடி செய்த சம்பவம் தொடர்பாக ருமேனியாவைச் சேர்ந்த இருவர் மீது 30-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 17 முதல் ஜூலை 27 வரையிலான காலப்பகுதியில் இவ்வாறான 14 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நிதி நிறுவனங்கள் முறையிட்டுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் ஏடிஎம் இயந்திரங்களின் பணம் வெளிவரும் பகுதிக்குள் இருபுறமும் ஒட்டும் தன்மையுடைய ‘டேப்’களைப் பொருத்தி, வாடிக்கையாளர்களுக்கு பணம் கிடைக்காதவாறு தடுத்துள்ளனர்.
பின்னர் வாடிக்கையாளர்கள் அங்கிருந்து சென்றதும், அங்கு சிக்கிய பணத்தை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கடந்த வாரம் இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து அதிகளவிலான இருபக்க ஒட்டு நாடாக்கள் மற்றும் இயந்திரங்களில் பயன்படுத்தப்பட்ட உலோகத் தகடுகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் ருமேனியாவைச் சேர்ந்த ரஸ்வான் செனிகா (41) மற்றும் வாசில் ஸ்டோயன் (52) என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவர் மீதும் திருட்டு மற்றும் சேதப்படுத்துதல் உள்ளிட்ட தலா 19 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இவர்கள் தென்மேற்கு ஒன்டாரியோ பகுதி முழுவதும் பயணித்து இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளதால், மேலும் பல பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.